தன்ராஜ் மாஸ்டரின் அறை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இருக்கும் சாயி லாட்ஜில் 13-ஆம் நம்பர் அறையாகும்.
அங்கு ஒரு Upright Piano அருகிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற இசை அச்சுப் பிரதிகள், அறை முழுவதும் புத்தகங்கள், ஒரு பழைய ரேடியோ, நான்கைந்து கிட்டார்கள், ஒரு சிறிய ஆர்கன், ஒரு பெஞ்ச், மாஸ்டர் அமர்ந்து கொள்ள ஓர் ஈசி சேர்.
பூனை ஒன்று, அதற்காக பால் ஊற்ற அறைக்கு வெளியிலிருக்கும் ஒரு தட்டு. இப்படித் தோற்றமளிக்கும் அவரின் அந்த 13-ஆம் எண் அறை. முதலில் தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருந்தேன். அப்புறம் கொஞ்சம் பழக்கமானவுடன் கூடத் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
வழக்கமாக காலை ஏழு மணியிலிருந்து மாணவர்கள் இரவு எட்டு ஒன்பது மணி வரை வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும், 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம்தான் பாடம், ப்ராக்டீஸ் எல்லாம்.
எனக்கு வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டும். சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு எந்த வேலையும் இருக்கவில்லை.
முதல் நாள் படத்தில் என்னுடைய ‘நோட்புக்‘கை வாங்கி ஏழாம் எண்ணைப் பெரிதாக எழுதி அதில் ABC என்று சப்த ஸ்வரங்களைப் பிரித்து ஏழு ஸ்வரங்களை எழுதி, அந்த ஸ்வரங்களை Piano-வில் காட்டினார்.
அடுத்த வகுப்பில் நான் சென்ற நேரம், மற்ற சில மாணவர்களும் வந்து விட்டார்கள். அவர்களை Guitar-ல் வாசிக்க வைத்துப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாரே தவிர, என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.
எனக்கோ நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை! ஆனால் இங்கோ தலை கீழாக! அவர்களுக்குப் பாடம் முடித்தவுடன் எனக்கு முதல் வகுப்பில் சொன்ன அதே விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். “அதுதான் அன்றைக்கே சொல்லி விட்டீர்களே ஸார்!” என்று சொல்ல பயம்.
இருந்தாலும் கேட்டுக் கொண்டிருந்தேன். சாப்பாட்டு நேரம் வந்து விட்டது.
“ஊம்! நீ போய் விட்டு அடுத்த வகுப்பிற்கு வந்து விடு” என்றார். வருத்தத்துடன் சென்றேன்.
அடுத்த வகுப்பிற்கு வந்தபோது அவர் மட்டும் தனியாக இருந்ததால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஸார், நான் தினமும் வருகிறேனே!” என்றேன்.
அவர் திகைத்துப் போனார். “தினமும் வருவதென்றால் கஷ்டம். இங்கு பலதரப்பட்டவர்கள் வருவார்கள். Practical – Theory என்று வேறுவேறு தரப்பட்டவர்கள் வருவார்கள்” என்று சொல்லிவிட்டுச் சிறிது யோசித்து, “ஆமாம், நீ ஆர்மோனியம் வாசிப்பாயில்ல?” என்றார்.
“ஆமாம் ஸார்!”
“எங்கே Piano-வில் வாசி!”
எதை வாசிப்பது? எனக்குத் தெரிந்த ‘சினிமாப் பாடலை‘ வாசித்தேன்.
“இதோ பார்! ஆர்மோனியம் வேற! Piano வேற! அதை வாசிக்கற மாதிரி இதை வாசிக்கக் கூடாது” என்றார்.
“வேற எப்படி ஸார்?”
“நீ Piano-வில் கையை வைக்கிறதே சரியில்ல! இதோ இப்படித்தான் உட்காரணும்! கைவிரல்கள் இப்படித்தான் இருக்கணும். வாசிப்பதோ இப்படித்தான் இருக்கணும்” என்று ஒரு சின்ன Music Piece வாசித்துக் காட்டினார்.
அதற்குள் பல மாணவர்கள் வந்து விட, எனக்குப் பாடம் நின்று போனது. அவர்களுக்கு வகுப்பு நடத்தினார். ஆனால் என்னைப் போகச் சொல்லவில்லை.
திடீரென்று என்னைப் பார்த்து, “எங்கே அந்த சினிமாப் பாடலை வாசித்தாயே, அதை நொடெஷன் (Notation) எழுது” என்றார்.
“ஓ!… உனக்கு நொடேஷன்ஸ் இன்னும் சொல்லிக் குடுக்கலையில்லை?”
“சரி சரி நீ வாசி” என்றார். வாசித்தேன். எல்லா மாணவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஏனென்றால், அந்த அறையில் சினிமாப் பாடல் கேட்பது அதுதான் முதல் தடவை.
நான் வாசிக்க வாசிக்க, அவரே Notation எழுதினார்! எழுதி முடித்த பின் மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
அவர்களுக்கோ குஷி தாங்கவில்லை.
அந்தப் பாடல் – திரு M.S. விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த ‘என்ன என்ன வார்த்தைகளோ‘ என்ற Piano பாடல்.
அவர் அந்த ட்யூனை அற்புதமாகப் பாராட்டினார்.
See the first Phrase – This is a Question? See the Answer! Yes, the second Phrase. It is perfect form of Music என்று Theoretical ஆக விளக்கினார்.
எனக்கு விஸ்வநாதன் ஸார் அவர்களிடம் இருந்த மதிப்பு அளவுக்கு அதிகமாகக் கூடி விட்டது. எனக்கு இசையமைப்பாளராக வேண்டுமென்ற ஆசை வந்ததே அவரால்தான்.
அவரையே என் மானசீக குருவாக எண்ணிக் கொண்டுதான் சென்னைக்கே வந்தேன்.
இதற்கிடையில் G.K. வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து விட்டேன்.
அது ஒரு தனிக்கதை!
