கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.
இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ‘ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்’ என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
ரமணரின் வாழ்க்கை, அவரது பக்தர்களுக்குச் சிலிர்ப்பூட்டிக்கூடியது. நுணுக்கமாக அவரது தத்துவங்களோடு இணைத்து ஆய்வு செய்து அலச விரும்புவோருக்கு வியப்பூட்டக்கூடியது. புரிந்துகொள்ள முடியாத புதிர்மூட்டை இல்லை அவர். மாறாக, தம் வாழ்க்கைக்கும், வெளிப்படுத்திய பேருண்மைகளுக்குமான இடைவெளிகளை அறவே களைந்தவர்.
இந்தியத் தத்துவஞானிகள் வரிசையில், ரமணரை முதலில் நிறுத்துவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை, அவரது வாழ்க்கை உதாரணங்கள் மூலமாகவே சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.
